» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

விடுகதையின் தொன்மம்
 

விடுகதையின் தொன்மம்
முனைவர் சுலோர்மணி

தோற்றம் பற்றி அறுதியிட்டுக் கூறமுடியாத மிகப்பழமை வாய்ந்த சிறப்பினைக் கொண்டவை. நாட்டுப்புற இலக்கியங்கள். நாட்டுப்புற மக்களின் வாழ்வியலையும், வரலாற்றையும் புலப்படுத்தும் நாட்டுப்புற இலக்கியங்கள் நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகும். நாட்டுப்புற இலக்கியங்களிலே நாட்டுப்புற மக்களின் உள்ளத்து எழும் உணர்வுகளையும் கற்பனை ஆற்றலைக் காணலாம். மக்களால் பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டுப் பாடப்பட்டு வந்த, வருகின்ற நாட்டுப்புற இலக்கியங்களுள் விடுகதையும் ஒரு கூறாகும். இது விடுவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வினாவிடைப் போக்குடையது. சிந்தனையைத் தூண்டும் சிறப்புடையது. அறிவுக்கு உரைகல்லாக விளங்குவது. புதிர்மைப் பண்பினைக் கொண்டிலங்குவதால் ''புதிர்'' என்று அழைக்கப்படுகின்றது. ''விடுகதையால் கூறுபவனின் உளப்பான்மை வளர்கிறது. ஆர்வத்தினின்றும் விடுகதை கிடைக்கிறது. சிறியோர்க்கும் பெரியோர்க்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது என ஜேம்ஸ் என்ற அறிஞர் கூறுகிறார். கனவு மனிதனது அடிமன உணர்வுகளுக்கு வெளியீடு தருவதுபோல் விடுகதைகளும் வெளியீட்டிற்கு உதவி வருகின்றன. என கர்லோசு கூறுகிறார் (நாட்டுப்புறவியல், ப.123) இதனால் இதன் பெருமையினை உணரலாம். இத்தகு சிறப்புடைய விடுகதைகளில் தொன்மம் பெறும் இடம் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.

விடுகதையின் பழமை:-

உருவகத்தினை அடிப்படைப் பண்பாகக் கொண்ட விடுகதையினைத் தொல்காப்பியர்,

பாட்டு, உரை நூலே, வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லோடு அவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர்'' (தொல். செய்யுளியல் 79)

என யாப்பு முறையினைக் கூறுகின்றபோது ''பிசி'' என்று கூறுகின்றார்.

''ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்
தோன்றுவது கிளர்ந்த துணிவினாலும்
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே'' (தொல்.செய்யுள் 165)

எனப் பிசி அமைகின்ற முறை பற்றியும் விளக்கம் தருகின்றார். விடுகதை என்ற சொற் பயன்பாடு பழந்தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் இல்லை என்றாலும், விடுகதை, புதிர், அழிப்பாங்கதை, வெடி, நொடி, எனப் பல சொற்களால் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் விடுகதை என்னும் சொல் புதிர்மைப் பண்புடைய புதிர்கள் அனைத்தையும் குறிப்பிடும் பொதுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. (நாட்டார் வழக்காற்றியல், ப.49) எழுத்திலக்கியம் அவை தோன்றிய காலச் சமுதாயத்தைப் பிரதிபலிப்பதுபோல எழுதா இலக்கியமாகிய விடுகதையும் அதனை விடுக்கின்ற மக்கள் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அச்சமுதாயத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கருப்பொருளாகக் கொண்டிலங்குகின்றது.

தொன்மம்:-

தொன்மம் என்பது பழமை என்பதாகும். பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமைமேற்றே என்று சுட்டப்பட்டுள்ளது. Myth என்ற ஆங்கில சொல்லே தொன்மம் எனத் தமிழில் வழங்கப்படுகிறது. தொன்மம் என்பதற்கு புராணக்கதை, புராணம், புராண மரபுக்கதை, புனைகதை என்றும் தமிழறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். இத் தொன்மங்கள் இலக்கியங்களின் ஆன்மா என அரிஸ்டாட்டில் குறிப்பிடுவது போல நாட்டுப்புற இலக்கியங்களிலும் தொன்மங்கள் ஆன்மாவாக விளங்குவதைக் காணமுடிகின்றது. ஏனெனில் வாய்மொழிக் கூறுகள் எப்பொழுது தனித்தன்மையுடையவனாக ஆக்கப்பட்டனவோ அன்றே தொன்மங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன. (நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள், ப.176) நாட்டுப்புற மக்கள் விடுத்து மகிழும் விடுகதைகளில் தொன்மக்கதைகள் இல்லாவிடினும் தொன்மக்கதைகளில் இடம்பெறும் தெய்வத்தன்மை வாய்ந்த பாத்திரங்களும் இயற்கை இகந்த நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

விடுகதைகளில் தொன்மம்:-

தமிழ் விடுகதைகள் கடவுளரின் பெயர்களைக் கொண்டிலங்குவதால் அவற்றை விடுத்து மகிழும் மக்கள் சமுதாயம் புராண இதிகாசப் பாத்திரங்களைப் பற்றிய அறிவுடையராய்த் திகழ்கின்றனர் என்பதை உணரமுடிகின்றது. ''மிகப் பழங்காலத்தில் பதிவு செய்யப்பட்ட சமயப் பனுவலாகிய வேதங்களில் உள்ள கடவுளர்கள் பற்றிய செய்திகள் மக்களால் மறக்கப்பட்டு, பழமொழிகளிலும் தொன்ம வாக்கியங்களிலும் எச்சங்களாக விளங்கின என்றும், மனிதப் பண்பேற்றப்பட்ட நிலையில் இவை கடவுளர் பற்றிய தொன்மங்களாக உருவெடுத்தன'' (நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள் ப.180) என்றும் அறிஞர் பெருமக்கள் கூறுவதற்கேற்ப வேலையின் களைப்பைப் போக்கிக் கொள்ள வேலைப்பளு தெரியாமலிருக்க நாட்டுப்புற மக்கள் விடைப் பொருளாகவும் விடுகதைப் பொருளாகவும் கடவுளர் பெயரை அமைத்து விடுகதை விடுத்து மகிழ்கின்றனர்.

''மஞ்சள் குருவி ஊஞ்சலாடும்
மகாதேவனுக்குப் பூசைக்காகும்'' (எலுமிச்சம் பழம்)

''ஆதியும் அந்தமும்'' இல்லாதவன் என்றும் ''பிறவாயாக்கைப் பெரியோன்'' என்றும் சிறப்பித்துக் கூறப்படும் சிவபெருமான் பிற கடவுளரைவிடத் தலைமைத் தன்மை என்ற நிலையில் இவ்விடுகதையில் சிவனை மகாதேவன் என்று குறிக்கின்றனர். அந்த மகாதேவனுக்குப் பூசைக்குப் பயன்படும் பொருள் எது என்பதை உய்த்துணர்ந்து விடைப்பொருளைக் கண்டறிய இவ்விடுகதையில் முதன்மைக் கடவுளாம் சிவன் உதவுகின்றான்.

''செண்பகவல்லி அம்மனும்
பூவண்ண நாதரும் சிரித்து மகிழ்ந்து
தொடுத்த பூவைச் சிக்கில்லாமல்''

அவிழ்த்தவருக்குச் சிக்கந்தா மலை žதனம் (தூக்கணாங்குருவிக் கூடு)

காடுகளிலும் கழனிகளிலும் வேலைசெய்யும் கிராமத்து மக்களுக்குத் தாங்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் காடுகளே விடுகதைக் களங்களாக அமையும். அக்களத்திலே காணும் இயற்கையின் அதிசயங்களைக் கண்டு வியப்படைகின்றனர். வியப்பினை விடுகதைக் கருப்பொருளாக்கி உடன் பணிபுரிகின்றவரையும் வியக்க வைக்கின்றான். மேற்காணும் விடுகதை இவ்வுண்மையினைப் புலப்படுவதைக் காணலாம்.

இயற்கை நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணம் அறியாத புராதன மனிதன் மந்திரங்களால் அவற்றைப் கட்டுப்படுத்தலாம் என நம்பினான். வளர்ச்சியடைந்த மனிதன் உலகத் தோற்றம், படைப்பு, மழை, இடி, மின்னல் போன்ற இயற்கையின் žற்றங்கள் கடவுளரின் செயல்கள் என்ற நம்பிக்கை கொண்டான். மரங்களில் பறவையினங்கள் கூடுகட்டி வாழ்வது இயற்கை. ஆனால் அதனை இறைவனின் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்றாகக் கற்பனை செய்து விடுகதை விடுகின்ற பாங்கு இவ்விடுகதையில் அமைந்திருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் எழுந்தருளியுள்ள செண்பகவல்லி அம்மன் அவ்வட்டார மக்களின் வழிபடுகடவுளாக விளங்குகிறாள். அவ்வம்மனோடு உடன் உறையும் இறைவன் பூவண்ணநாதன் அம்மையும் அப்பனும், மனைவி கணவன் என்ற நிலையில் ஓய்ந்திருக்கும் வேளையில் சிரித்து மகிழ்ந்து பூத்தொடுத்த தாகக் கற்பனை செய்து விடுகதையின் விடைப்பொருளைக் கண்டுபிடிக்க வகைசெய்யும் வகையில் விடுகதை அமைத்துள்ளனர்.

''வெள்ளப் பிள்ளையார் கோவிலுக்கு விளக்கு வைக்க முடியாது
கறுத்தப்பிள்ளையார் கோவிலில் கால்வைக்க முடியாது (கண்)''

கோவில் அமைத்து அதில் இறைவனைக் குடியேற்றி வழிபட்ட மனித சமுதாயம் அக்கோவிலையும் அதிலே குடியிருப்பதாக நம்பும் இறைவனையும் விடுகதைப் பொருளாக்கியதை இவ்விடுகதை விளக்குகின்றது. கண்ணின் வெண்ணிறப் பகுதியினை வெள்ளப்பிள்ளையார் என்றும் கருவிழியினைக் கறுத்தப் பிள்ளையார் என்றும் பூடகமாகச் சொல்லி விடுகதையின் விடையினை கண்டறியச் செய்யும் பாங்கில் விடுகதை அமைத்துள்ளதைக் காணமுடிகிறது.

கோவிலுக்குள் சென்று விளக்கேற்றி வழிபட அனுமதி மறுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்கள் சமுதாயத்தின் வேதனைக்குரலின் பிரதிபலிப்பாக இவ்விடுகதையினைக் கொள்ளலாம். கிராமத்து மக்களின் அனுபவங்கள், இன்ப துன்பங்கள் போன்றவற்றின் வெளிப்பாடுகள் பல்வேறு நாட்டுப்புற இலக்கிய வடிவம் பெறுகின்ற போது தொன்மக் கதைகள் அவற்றில் இடம்பெறும் பாத்திரங்கள் துணைநின்றுள்ளதை அறியலாம்.

''அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு
அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி'' (மயில்)

வைணவர்கள் வழிபடுகடவுளாகிய திருமாலின் பல்வேறு அவதாரங்களில் ஒன்றாகிய கண்ணன் பெயர்தாங்கி இவ்விடுகதை அமைந்துள்ளது. இவ்விடுகதையின் விடையாகிய மயில் என்னும் பறவையின் தோற்றத்தைத் தங்கம் பதிக்கப்பட்ட அங்கம் கொண்ட கண்ணனாகக் கற்பனை செய்கிறது மனித மனம்.

அனிருந்தன் என்ற கண்ணனின் பேரன், அசுரரின் சூழ்ச்சியால் அசுரனின் மகளாகிய உஷை என்பவளை மணக்க நிர்பந்தம் செய்யப்படுகிறான். அசுரனிடமிருந்து தனது பேரனை மீட்க அவன் அன்று ஆடிய குடக்கூத்து நாட்டுப்புற மக்களின் மனதில் உறைந்து விடுகதையாக மலர்ந்து மணம் பரப்புகின்றது என்பதனை இவ்விடுகதை சுட்டக் காணலாம்.

''பெட்டியைத் திறந்தேன்
கிருஷ்ணன் பிறந்தான்'' (நிலக்கடலை)

இவ்விடுகதையில் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட கிருஷ்ணன் கதை காட்டப்படுகிறது. கம்சனின் சகோதரியாகிய தேவகியின் வயிற்றில் பிறக்கும் ஆண் குழந்தையால் தனக்கு அழிவு நேரிடும் என அஞ்சுகிறான். அதனால் தேவகியின் ஏழு குழந்தைகளையும் ஒவ்வொன்றாகக் கொன்று விடுகிறான். இதனைக் கண்ட தேவகி வேதனைப்பட்டு எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ணனைத் தன் சகோதரனின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றக் கருதி, பெட்டிக்குள் வைத்து யமுனை நதியில் இடுகின்றாள். அப்பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட கிருஷ்ணன் பின்னர் யசோதையால் எடுத்து வளர்க்கப்படுகிறான். இப்புராணக்கதையின் சுருக்கமாக இவ்விடுகதை அமைக்கப்பட்டுள்ளதை எவரும் மறுக்கவியலாது. இப்படிப் பல்வேறு விடுகதைகள் தொன்மைப் பாத்திரங்களாகவும், தொன்மக் கதைகளின் விளக்கங்களாகவும் விளங்குவதைக் காணமுடிகிறது.

1.தொன்மங்கள் பல உருவாவதற்கும் ஏட்டில் இடம் பெறுதற்கும் விடுகதைகள் உறுதுணை புரிந்துள்ளன.
2. மிகப்பழமையான இலக்கிய வடிவங்கள் ஏட்டில் இடம்பெறுவதற்கு விடுகதை என்னும் நாட்டுப்புற இலக்கியம் வழிவகுத்துள்ளது.
3. நாட்டுப்புற மக்களின் கற்பனை ஆற்றலும் சிந்திக்கும் திறனும் விடுகதைகளில் வெளிப்படுகின்றன.
4. நாட்டுப்புற மக்களின் பண்பாட்டுக் கருவூலங்களாக விடுகதைகள் திகழ்கின்றன.

நன்றி:- வேர்களைத்தேடி


-------------------------------------------------------------------------------- 

 

 

[ கம்பியூட்டர் ] [ இலக்கியம் ] [ சமூகம் ] [ பொது ] [ மேலும் ]

Back

இலவச சுட்டிகள்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on Wednesday, 03/01/2007