தாய்மை...
இடுப்பு நோகுதம்மா என்று
இயல்பாய்ச் சொன்னபோதும்,
துடித்துப் பதறித் தொடுக்கிறாள்,
தொடர்க் கேள்விக் கணைகளை!
வலிகளைத் தரம்பிரித்துச் சொல்லி,
வந்த வலி எந்த வலி என்கிறாள்;
பொய்யோ மெய்யோவென்று அறிய
பெருன்ஜீரகக் கஷாயம் தந்து,
பெரிதொரு ஆராய்ச்சி செய்கிறாள்!
விண்ணென்று தெறிக்கும் வேதனையை,
விளக்கிச் சொல்ல இயலாது,
அம்மா, அம்மாவென அரற்றும் என்னை,
ஆதரவாய்த் தழுவிக் கொள்கிறாள்!
கூந்தல் அலசவும் அதுநாள்வரை
குளியலறைக்குள் அனுமதித்திராத அவளை,
கூடவே இருக்கச் சொல்லி,
கரம் பற்றிக் கொண்டபோது,
காணச் சகியாமல் கண்ணீரை உகுக்கிறாள்!
அன்றொருநாள் அவளுற்றதும்
இதே துயரம் என்றறிந்தபோதும்,
இன்றென் குறுக்குவலி பொறுக்காது,
முந்தானையால் முகம்பொத்திக் குலுங்குகிறாள்!
சுகமாய்ப் பிரசவிக்க வேண்டுமென்று,
குலதெய்வத்தை வேண்டுகிறாள்;
போதாதென்று கூடவே அழைக்கிறாள், அவள்
பார்த்தேயிராத பல தெய்வங்களை!
அப்பாவின் செல்லமென்று இருந்தவள்,
அம்மாவின் பெண்ணானேன்,
அழகிய என் தேவதை
அவதரித்தக் கணம் முதலாய்!
என்னிலும் பன்மடங்கு தவித்து,
வேதனையில் வியர்த்து நின்ற
என் அம்மாவின் ஆர்ப்பாட்டம் கண்டு,
சின்ன இதழ் கோணி,
கன்னக் கதுப்பில் குழி விழ,
ஏளனப் புன்னகை பூக்கும்
என் அன்புமகளைக் கையிலேந்தி,
என்ன பாடு படுத்திவிட்டாயடி,
என் பெண்ணைஎன்று
செல்லமாய்க் கடிகிறாள்!
எதுவோ புரிந்ததுபோல்
அழுகைக்கு ஆயத்தமாய்
உதடு பிதுக்கும்
மகளின் துன்பம் காணப்பொறுக்காமல்,
முகம் திருப்பிக் கொள்கிறேன், நான்!
பிரபஞ்சன்
பிரகாஷ்
(மதுரை)
|