நீ -
நடந்து சென்ற வேகத்தில்
காற்று -
இதர அத்தனை சப்தங்களையும்
மறைத்துக் கொண்டு
ஒன்றை மட்டுமே எனக்குள்
பதித்துச் செல்கிறது;
உன் கொலுசு சப்தம்!
-------------------------------------------------------
உன் -
காது தோடு தொட்டு
கன்னம் தொட்டு
கழுத்து தொட்டு
உள் புகும் காற்றை
சபிக்கிறேன்;
ஏ காற்றே, இனி
நானாக இருக்கக் கடவாய்!
-------------------------------------------------------
உன் -
மலர் கூந்தலின்
வாசமும்
அழகும்
சண்டையிட்டுக் கொண்டன -
யாரால் உனக்குப்
பெருமை என்று;
உன்னால் -
அவைகளுக்குப் பெருமையென்று
சொல்லவே
இக்கவிதை!
-------------------------------------------------------
நில் -
கவனித்திருப்பாய்
இல்லையென்று சொன்னால்
நான் ஏற்கப் போவதில்லை;
ஆமென்று சொல்வதிலும்
அடங்கப் போவதில்லை;
வா..
அதோ நமக்காக
வானமேறிக் காத்திருக்கும்
அந்த கற்பனை தேர் ஏறி -
உலகம் முழுக்கச் சொல்வோம்
நாம் காதலர்களென்று!
-------------------------------------------------------
அதுசரி -
எந்த புள்ளியில்
நாம் காதலிக்கத் தயாரானோம்?
நினைவில்லையென்றாலும்
பரவாயில்லை -
இந்த புள்ளியை நினைவில்
கொள்;
இந்த புள்ளி -
ஒன்று நம் வாழ்வு
அல்லது -
மரணம்!
-------------------------------------------------------
நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பை -
ஐம்பெரும் பூதம் என்கிறார்கள்;
காதல் -
ஆறாம் பூதம்.
ஆம்; காதல் இல்லையேல்
நீயும் நானும் -
அன்றே இல்லை!