கழிப்பறை 1
-
சுப்ரபாரதிமணியன்
" இந்தக் கக்கூஸ’லேயே குடியிருக்கலாம்
போல இருக்கு "என்றாள் மாதவி. கழிப்பறையின் பளபளப்பு அவளின் முகத்தில்
மினுமினுத்துக் கொண்டிருந்தது. பிரகாசத்தை கழிப்பறையின் உட்சுவர்கள்
பிரதிபலித்துக் கொண்டிருந்தன. ஒரு வகை பளபளப்பு இப்போதுதான் பளிங்குக்
கற்களை பதித்துவிட்டு நகர்ந்து விட்டிருப்பதுபோல தோன்றச் செய்தது.
ஓடோனில் டப்பாவின் சிறுதுளை வழியே ஒருவகை வாசம் பரவிக் கொண்டிருந்தது.
வெவ்வேறு நிறங்களாலான குத்திட்டு நிற்கும் மயிற்கற்றைகள்போல கழிப்பறைய்
சுத்தம் செய்யும் பிரஷ் இருந்தது. அதன் கைப்பிடி பருத்தும் அதன்
முனையில் தொங்கிக் கொண்டிருந்த கயிறு பல வர்ணக் கலவையாயும் இருந்தது.
"இங்க இருக்கறதுனா இருந்திருக்கலாமே" என்றான் அவன். வியர்வையில்
ஈரமாகியிருந்த பனியனை சுருட்டி எறிந்தான். அது டிரஸ்ஸ’ங் டேபிளின் மேல்
விழுந்து சின்ன பவுடர் டப்பாவொன்றை அங்கிருந்து நழுவி விழச் செய்தது.
இளம் சிவப்பில் அழுத்தமில்லாதபடி இருந்த பூக்கள் கொண்ட சட்டையைப்
போட்டுக் கொண்டான். சரிந்தபடியே கட்டிலில் படுத்தான். மூக்கு
விடைத்துச் சுருங்கியது. கண்களை மூட ஆரம்பித்தான்.
"நான் இருக்கறதும் இது மாதிரி ஒத்தை ரூம்தா. இதுக்கு ஆகற ஒருநாள் வாடகை
என்னோட ஒத்தை ரூமுக்கு மாசவாடகை. அப்புறம் எப்பிடி இருக்கறது."
"இருக்கற வரைக்கும் இருந்துக்க வேண்டியதுதா.."
"இன்னிக்கு ராத்திரி வரைக்குமோ நாளைக்கு காலைல் வரைக்குமோன்னு வேண்ணா
இருக்கலாம்."
"இருந்துட்டுப்போ.. இல்லீன்னா இப்பவே போறதுன்னாலும் சொல்லு. பாக்கெட்ல
இருந்து காசெ எடுத்துத் தர்றேன் போயிடு"
அவ்வளவுதானா பசப்பெல்லாம். ஒரு
தரத்துக்கே போதுமுன்னு ஆயிருச்சா.."
அவன் கண்களை மூடியிருந்தான்.
சவாசனத்தின் கிடப்பதுபோல கிடந்தான். கழிப்பறையை மீண்டும் பார்த்தாள்.
மின்விளக்கு அணைக்கப்பட்ட பின்
கழிப்பறை இயல்பான பிரகாசத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பதாய் தோன்றியது.
கழிப்பறையிலிருந்து திமிறிக் கொண்டு வெளிச்சம் வெளியேறிக்
கொண்டிருந்தது. வர்ணம் பூசப்பட்டு வைக்கப்பட்ட இட்லி பாத்திரம் போல
மலம் கழிக்கும் குழி இருந்தது. உட்கார்ந்தபடியே மலம் கழிக்கலாம்.
வயதானவர்களுக்கு சௌகரியமானது. தனக்காவுக்கு அடிக்கடி கால்மூட்டில்
வீக்கம் வந்துவிடும். ஏதாவது எண்ணெய்யெயைக் காய்ச்சி பூசிக் கொள்வாள்.
எண்ணெய் பூசிக் கொள்கிற நாட்களில் மட்டும் உடுத்திக் கொள்ளவென்று
அழுக்கான ஒருவித வாசம் வீசும் சேலைகளை வைத்திருப்பாள். சேலை எண்ணெயின்
பூச்சால் மினுங்கும். அந்தச் சேலைகளை துவைப்பதற்கென்று வெகு பிரயத்தனம்
எடுத்துக் கொள்வாள். கல்லில் தான் துவைப்பாள். "இந்த எண்ணெய்
போகமாட்டீங்குதே.. என்ன சோப்பு போட்டாலும் போக மாட்டேங்குதே..
பொன்வண்டு சோப்பு பிரமாதம்ன்னு சொல்வாங்களே அதுவெல்லாம் போட்டுப்
பார்த்தாச்சு. கொஞ்சமும் மசிய மாட்டீங்குதே.. என்ன கருமமோ.." என்ரு
சலித்துக் கொள்வாள். "இந்த தேவிடியாக் கீரைன்னு இண்ணு ஊர் முழுக்கக்
கெடக்குமே..
இப்ப என் கண்ணுக்கு தட்டுப்பட
மாட்டேங்குது. அதுல பத்து நாளைக்கு கீரை மசியல் பண்ணி சாப்புட்டா இந்த
மூட்டு வலி போகும். என்ன தேவிடியாக் கீரையோ..."
மலங்குழி பீங்கனின் மேலிருந்த முடியைத்
திறந்து சாத்தி வைத்துக் கொண்டாள். வெளியில் இருந்த நிறத்தை
மங்கலாக்கியதுபோல அதன் உள்நிறம் இருந்தது. வெளுப்பு நிறத்திலான துளிகள்
ஏகமாய் ஒட்டியிருந்தது. இதைச் சுத்தம் செய்வதற்கு வெளுப்பு நிறத்திலான
ஏதாவது திரவம் பயன்படுத்தப்பட்டிருக்கும் என நினைத்தாள். தொலைக்காட்சி
விளம்பரத்தில் ஹார்பிக் அவளுக்குப் பிடித்திருந்தது. இப்படி
மலக்குழியெல்லாம் விஸ்தாரமாகக் காட்டுவார்களா என்ன. அழுக்கானதையும்
காட்டுகிறார்கள். அருவருப்பாக இருக்கிறது. ஹார்பிக் திரவம் ஊற்றிக்
கழுவியபின் அழகாகிவிடுகிறது. எவ்வளவு சுத்தமாயிருச்சு என்ற சிரிக்கும்
பெண்ணின் மூக்கு சுருங்கி விரிகிறது. ஈறு தெரிகிற அளவு அவள். அழகென்று
எதுவும் இல்லாத சாதாரணப் பெண். அந்தப் பெண்ணெல்லாம் தொலைக் காட்சியில்
வந்து விட்டாள்.தனக்கொரு வ'ய்ப்பு அதுபோல் கிடைக்காதா. அந்தப்
பெண்ணுக்கு தொலைக்காட்சியில் தோன்ற வாய்ப்புக் கிடைத்ததனால்தான் அப்படி
சிரிக்கிறாளா, அல்லது ஹார்பிக் உண்மையில் வெளுக்கச் செய்திருக்குமா.
மாதவிக்கு ஆச்சர்யமாகவே இருந்திருக்கிறது.
மலங்குழியும், குளிக்கும் அறையுமாகச்
சேர்ந்திருந்தது.இது அவளுக்குப் பிடிப்பதில்லை. மலக்குழி
குளிக்கும்போது மனதில் இருந்து தளர்ந்து போகாது. மலக்குழியை
உபயோகிக்கும்போது குளிக்கும் பகுதியின் அழுக்கும், மூலையும் மனதில்
இருந்து கொண்டே இருக்கும். குளிக்கும்போது மலக்குழி வாயைத் திறந்து
கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும். இந்த மலக்குழி பாவாயில்லை.மூடி
போட்டபடி ஒரு அடி உயரத்திற்கு நிற்கிறது, ஆனால் பட்டனை அழுத்தினால்
தண்ர் போகவில்லை. சர்சர்ரென்று ஏதோ இழுபடுகிற சத்தம்தான் கேட்டது.
காற்று எங்கோ அலைக்கழிந்து கொண்டிருப்பது போல பட்டது. மலத்துணுக்குகள்
வேறு கட்டி கட்டியாய் மிதந்து கொண்டிருந்தன. வாளியில் தண்ர்
பிடித்துதான் ஊற்ற வேண்டியிருந்தது. ஊற்ற மலத்துணுக்குகள் மேலெழும்பி
வந்து அருவருப்பு ஊட்டியது. கதுவுபக்கம் பார்த்துக் கொண்டே தண்ரை
ஊற்றினாள். சௌகரியமான மலக்குழி என்ற எண்ணம் மனதிலிருந்து தப்பிப்
போய்க் கொண்டிருந்தது.
கண்ணாடித் தடுப்புகளின் வழியே பார்வையை
ஓடவிட்டாள். கத்தடித்து நிற்க வைத்தது போல பேருந்துகள் நின்றிருந்தன.
பேருந்து நிலையத்தின் அருகாமையில் அவன் அறை எடுத்தது மாதவிக்குப்
பிடிக்கவில்லை. இரண்டு அடி இடைவெளியை நடந்து கொண்டே அந்த விடுதியின்
முகப்பிற்கு வந்து விட்டிருந்தாள். அந்த விடுதியின் இடதுபுறத்தில்
இருந்த உணவகம் ஆறுதல் தருவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"உள்ள போயி காபி சாப்புட்டு பேசலாம்"
அவனின் பதட்டம் தணிந்திருந்தது.. முகம் கழுவிக் கொண்டு வந்தவன்
பெருமூச்சுவிட்டான். "காபி சாப்புடலாமே..."
"லாட்ஜில் ரூம் போடணும். உம் பேரு
மல்லிகா. எம் பேரு சரவணன். பேரை ஞாபகம் வச்சுக்க மல்லிகா. எஸ்.மல்லிகா.
இப்பிடித்தா லாட்ஜ் டிரிஸ்டர்ல எந்ட்ரி போடணும்."
"மல்லிகாங்கறது உனக்கு புடுச்ச பேரா.."
"அப்படியில்ல. டக்குன்னு மனசிலெ
வந்தது...":
"ஒவ்வொரு தரமும் வர்றப்போ இந்தப்
பேர்லதா பதிவு பண்ணிவியா.."
"ஒவ்வொருதரமுன்னு யாரு வர்றாங்க.
என்னமோ அபூர்வமா."
"செக்கிங்ன்னு ஏதாச்சுச் வந்தா அற்றஸ்
என்ன சொல்றது. எழுதிக் குடுத்திரு. பர்சிலே வச்சிக்கிறேன். என்ன
ஊருன்னு பதிவு பண்ணப்போறே.."
"பொள்ளாச்சின்னு.."
"செரி பொள்ளாச்சின்னு சொல்லிர்லாம்.
இங்கிருந்து பொள்ளாச்சிக்கு எவ்வளவு சார்ஜ்?"
"லாட்ஜ்ல இருக்கறவன் வாயைக்
கிண்டறதுக்காக ஏதாச்சும் கேப்பான். செரியா பதில் சொல்லாட்டி சந்தேகம்
வந்திரும்லே அதுதா.."
அறை பதிவு செய்யும்போது "பம்பாய்
கக்கூஸ் உள்ள ரூமா குடுங்க" என்று கேட்டிருந்தான். "சிரமந்தா. பாத்துதா
சொல்லணும்."
"இல்லை பம்பாய் கக்கூஸ்ன்னா கொஞ்ச
சவுகரியமா இருக்கும்ன்னு நெனச்சேன். எதுவாயிருந்தாலும் செரிதா."
மாதவி கட்டிலின் ஓரத்தில் வந்து
உட்கார்ந்தாள். கட்டிலின் இன்னொரு பகுதி உயர்ந்து தாழ்ந்து நின்றது.
அவன் கண்களின் மேல் கைகளை இறுக மூடியிருப்பது போல் உடம்பைக்
கிடத்தியிருந்தான். தானும் இது போல் உடம்பைக் கிடத்திக் கொள்ளலாமா
என்று நினைத்தாள்.
சுப்ரபாரதிமணியன்
கழிப்பறை 1
கழிப்பறை 2 கழிப்பறை
3
|