ரெட்டைக் கோம்பை வீதியில் இந்த ஒத்தை
வீடுகளிலிருந்து எப்போது தப்பிக்கப் போகிறோம் என்பது மாதவிக்கு பெரிய
கேள்வியாக இருந்தது. வேறு எங்காவது ஒற்றை வீடு கிடைத்துவிடும். அதற்காக
அலைய வேண்டியிருக்கும்.
பதினைந்து ஒற்றை வீடுகளுக்கு ஒரு
குளியலறையும் ஒரு கழிப்பறையும் மட்டுமே இருந்தன. கழிப்பறை பதினைந்து
ஒற்றை அறைகளுக்கு தாக்குப் பிடிக்காத மாதிரி ஆட்கள் உள்ளே செல்வதற்காக
வரிசையைக் கொண்டிருக்கும். வரிசையில் நிற்பதற்குப் பயப்பட்டு மாதவி
தவிர்த்து விடுவாள். பல சமயங்களில் மலக்குழி நிரம்பி வழிந்து
சங்கடப்படுத்திவிடும். அப்போதெல்லாம் கழிப்பறையை யாராவது
பூட்டிவிடுகிறார்கள். பதினைந்து ஒற்றை வீடுகளின் உரிமையாளர் நகரின்
வேறு பகுதியில் இருக்கிறார். எனவே மலக்குழி நிரம்பி வழிகிற நேரங்களில்
திடீரென ஏதாவது முடிவெடுக்க யாராவது இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதுமாதிரி சமயங்களில் பூட்டொன்று
கழிவறையில் தொங்கும். குளியலறையில்தான் சிறுநீர் கழிக்க
வேண்டியிருக்கும். சிறு குழந்தைகள் இவ்வகையான அவசர நேரத்தில்
குளியலறையைப் பயன்படுத்தி விடுவர். களேபரமாகி விடும்.
சம்பந்தப்பட்டவர்கள் குளியலறையை சுத்தம் செய்யாத வரைக்கும் கூக்குரல்
இருந்து கொண்டே இருக்கும்.
கழிவறையில் பூட்டுப் போடப்பட்டிருப்பது
கண்ணில் பட்டது. செவ்வகக் கதவின் ஓரத்தில் கறுத்த மச்சம் போல் பழைய
பூட்டொன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஒற்றை ஆள் புகுவதற்கென்று
உருவாக்கப்பட்டது போல சிறுத்திருந்தது. குளியலறை கூட அப்படித்தான்.
ஒற்றை ஆள் நின்ற உடம்பைச் சுற்றிக் கொள்வதற்கான நெருக்கடியான இடம்
போலிருக்கும். இன்றைக்கு வெளியில் போவதைத் தவிர வேறு வழியில்லை.
லேசான இருட்டு எதிரில் வருபவர்களை
அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி ஆக்கிவிட்டது. வேறு வழியில்லாமல்
முள்புதர்கள் அடர்ந்த பகுதியைத்தான் இன்றைக்குப் பயன்படுத்த
வேண்டியிருக்கும் என்பது ஞாபகம் வந்தது.
கழிப்பறையின் முன் இரண்டு மூன்று பேர்
நடமாட ஆரம்பித்தாலோ கழிப்பறை பூட்டப்பட்டிருந்தாலோ முட்புதர்
பகுதிக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.
ஒற்றை வீடுகளின் அணிவகுப்பிற்கு பின்
இரண்டு நிமிட நடையில் முட்புதர்கள் இருந்தன. நகரின் ஒதுக்குப் புறத்து
காலியிடங்களெல்லாம் கட்டிடங்களாகிக் கொண்டிருந்தன. இந்தப் பகுதி
மட்டும் வெற்றிடமாக முட்புதர்களால் அடர்ந்திருந்தது. அந்த
இடத்துக்காரர் மைசூரில் இருக்கிறாராம். வசதியானவர் என்பதால் இந்த
இடத்தை விற்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லையாம். அந்த இடம் மலங்
கழிக்கவென்றாகிவிட்டது.
விடியற்காலை நேரத்தில் அப்பகுதியில்
நடமாடுபவர்கள் கொஞ்சம் அதிகம் இருப்பார்கள். இருட்டின பின்பு டார்ச்
லைட்டுடன் வந்து ஒதுங்கும் ஆண்களும் இருந்தார்கள். பெண்கள் ஆண்களோடு
வருவதும் பின் அவரவர்களுக்கென்று இருக்கும் புதர்ப்பகுதிக்குப் போவதும்
சகஜம். "புதருக்குத் தனியாப் போகாதே" என்று கணவன்மார்கள் அக்கறையுடன்
மனைவிமார்களுக்கு அறிவுரை சொல்வது வழக்கம்.இருட்டு, புதர்பகுதி பல
சிக்கல்களை அவ்வப்போது உருவாக்கும்.
எவனோ புதர் மறவுல உக்காந்து பாக்கறான்,
செயின் அத்துட்டுப் போயிட்டான், உரசரது கிள்ளறதுன்னு வர்ற சில பேர்
இருக்காங்க.. என்ற செய்திகள் அவ்வப்போது வருவதுண்டு.
மாதவிக்கு இதுமாதிரி செய்திகளைப்
பரப்பிவிட்டு வேடிக்கை பார்க்கலாமா என்று தோன்றியதுண்டு. 'எவனோ கையைப்
புடுச்சு இழுத்தான். வர்றவளெ முத்தம் குடுத்துட்டு ஓடிட்டான்" என்றபடி.
இதையெல்லாம் தான் சொன்னால் நம்புவார்களா என்பதை நினைக்கிற போது
மாதவிக்கு சிரிப்பு வரும்.
புதர்களுக்குச் செல்லும்போது கால்களை
ஜாக்கிரதையாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கால்களில் மலம் அப்பிக்
கொள்ளும். மலம் இல்லாத ஒன்றரை சதுர அடி பரப்பைத் தேடிக் கண்டுபிடித்து
உட்கார வேண்டும். உட்கார இடம் தேடும்போது மட்டும் கண்களைத் தாழ்த்த
வேண்டும். அதற்கப்புறம் கண்களைத் தாழ்த்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்
கொள்ளாதபடி நடந்து கொள்ளவேண்டும். தனக்காவுக்கு இது மாதிரி இடங்களை
மலம் கழிக்க உபயோகப்படுத்தும் போது துடைத்துக் கொள்ள கல்லைத் தேடுவாள்.
கல் கிடைக்காத போது எல்லாம் நாறுது என்றபடி புலம்பிக்கொண்டே இருப்பாள்.
வெளிநாட்டுக்காரர்கள்
துடைத்தெறியவென்று காகிதங்களைப்
பயன்படுத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பதை தனக்காவிடம்
சொல்லியிருந்தாள். பேப்பரை வெச்சு தொடச்சிட்டதற்கப்புறம் கையைக்
கழுவிக்கவாங்களா இல்லையா என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்பாள். புதர்
பக்கம் வந்து போகிறபோது யாரும் தன்னை தொட்டு விடக்கூடாது. உடம்பு
அதிர்கிற மாதிரி உலுக்கிக் கொள்வாள். பதறிப் போய்விடுவாள்.
நகரின் ஒதுக்குப்புறத்தில் திடீரென
முளைத்த குடியிருப்புப் பகுதி என்பதால் பொது கழிப்பிடம் எதிவும்
அமையவில்லை என்பதை தனக்கா ஒருதரம் சொல்லியிருந்தாள். ஒற்றை அறை
வீட்டில்தான் தனக்கா குடும்பத்தோடு இருக்கிறாள். பாத்ரூம் லெற்றீன்
உள்ள வூட்டுக்குவாடகை போறது, அப்பறம் அது மாதிரி வூடு கட்டறதுங்கறதுதா
எங்கனவு என்பாள் அவள்.
டில்லி முட்களின் ஆக்கிரமிப்பு பெரிய
அரண் போல்தான் இருந்தது. உடம்பை வளைத்து உள்ளே புகுந்தாள் மாதவி.
இருட்டினுள் கண்களை ஊடுருவ வைப்பது வெகுசிரமமாக இருந்தது. கால்களில்
மலம் அப்பிக் கொள்ளக்கூடாது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மெல்ல
ஊடுருவி உள்ளே நுழைந்தபோது டில்லி முள் ஒன்றின் பிசிறு இடுப்புப்
பகுதியைக் கீறியது. உடம்பு திடுக்கிட்டு உதறுவதாக இருந்தது. முள்
கிழித்து காயம் ஏதாவது ஆகியிருக்குமா என்பதைப் பார்ப்பதற்க்காய் வலது
கையினை இடுப்பில் வைத்தாள். பிசுபிசுவன்றிருந்தது. ரத்தக்கசிவா என்ற
பயத்தில் உடம்ப் ஒரு நிமிடம் நடுங்கி நின்றது. வியர்வையாக இருக்கும்
என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள முயன்றாள்.
சுப்ரபாரதிமணியன்
கழிப்பறை 1
கழிப்பறை 2
கழிப்பறை
3