Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 April 08, 2009

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

tamilparks

@

gmail.com

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

கழிப்பறை 3 - சுப்ரபாரதிமணியன்
 


 

நேற்றைக்கு நடமாடும் பொதுக்கழிப்பறையொன்று மந்திரியொருவர் திறந்து வைத்திருந்தார் என்பதை தனக்காதான் மாதவியிடம் சொன்னாள்.


"வீதிவீதியா வந்து நிக்குமாமா. நாம போயிக்காலாம்.."
 

"நமக்கு வர்ற நேரத்திலதானே ஒண்ணுக்கும் ரெண்டுகும்ன்னு போக முடியும். அது வற்ற நேரத்தில் நமக்கு வருமா."
 

"வர வெச்சுக்க வேண்டியதுதானே. பழகிக்கணும்.."
 

"காசு கேப்பாங்களா.."
 

"கவர்மெண்டது போல இருக்கு. கவர்மெண்டதுன்னா காசு கேக்க மாட்டாங்க."
 

"லஞ்சம்ன்னு கேப்பாங்க."
 

"எது கேட்டாலும் குடுத்தர வேண்டியதுதா.."
 

" ஒவ்வொரு வீதிக்கும் ஒவ்வொரு நேரத்துக்குப் போகும்போல. நம்ம ஏரியாவுக்கு எப்ப வரும்ன்னு தெரியலே. அறிவிப்பாங்களாம்."
 

தெற்கு முக்கில் நடமாடும் கழிப்பறை நிறுவப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். தெற்கு முக்கில்தான் அரசியல் கூட்டங்கள் பெரும்பாலும் நடக்கும். வெகு விஸ்தாரணமாக இருக்கும். வெகு விஸ்தாரண இடத்திற்குத்தானே மந்திரிகள் வருவார்கள் என்று சொல்லிக் கொண்டாள் மாதவி.
 

வேலைக்குப் போவதற்குத் தோதுவான நேரத்தில் வந்து போகுமா என்று தெரியவில்லை. இந்த வாரத்தில் மூன்று நாட்கள் இப்படியாகிவிட்டன. வேலையில்லாத நாள் என்றால் வயிற்றில் வைத்துஅடைத்துக் கொண்டிருக்கலாம். வேலைக்குப் போகும் நாளென்றால் வயிற்றைச் சுத்தம் செய்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். பஞ்சுத் துகள்கள் காலி வயிற்றை நிரப்பி விடும்.
 

தெற்கு முக்கின் நடுவீதியில் நீளமாக லாரியொன்றை நிறுத்தி இருப்பதுபோல இருந்தது. நீல வண்ணத்தை அடித்து உடம்பு உப்பிப்போன யானை போலவும் இருந்தது. அதன் நீல வர்ண மினுமினுப்பு சுற்றிலும் இருப்பவற்றை மங்கலாக்கியிருந்தது.
 

அவசர கதியில் வந்து போகிறவர்கள் ஒரு நிமிடம் நடமாடும் கழிப்பறையை பார்வை பார்த்து போய்க் கொண்டிருந்தார்கள். செல்லாண்டியம்மன் தேரின் ஒரு பகுதி தெற்கு முக்கின் இன்னொரு மூலையில் இருந்தது. தேர் நிற்கும் இடத்திற்கு இணையாக கழிப்பறையை நிறுத்தியிருப்பதற்கு யாராவது சங்கடப்பட்டிருப்பார்களா. ஒரு நாளைக்குத்தானே என்று விட்டிருப்பார்கள். அதுவும் மந்திரி வந்து போகும் சமாச்சாரம். யாரும் கேள்வி கேட்டு மூச்சு விட்டிருக்க மாட்டார்கள்.
 

நாலைந்து ஆட்டோக்களின் பரபரப்பான நகரலில் மாதவி வீதியின் மறுபுறம் நிற்க வேண்டியதாகி விட்டது. ரொம்ப நேரமாய் ஒருவர் நின்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகப்பட்டது. அவரின் கசங்கிய சட்டையின் முதுகுப்பகுதி பளிச்சென்று கண்ணில்பட்டது. அவளின் வயிற்றில் கோளாறெல்லாம் முதுகுப்பகுதி சட்டையில் வந்துவிட்டிருந்தது போலிருந்தது. மாதவி கசங்கிய சட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த மனிதனின் முகம் இது போல் கசங்கித்தான் போயிருக்குமா என நினைத்தாள் மாதவி.
 

வயிறு கனத்துக் கொண்டிருந்தது. அறையின் கழிப்பறை வரிசை அவளை இவ்வளவு தூரம் துரத்தியிருந்தது. ஏதோ நடமாடும் கழிப்பறை திறந்து ஆளில்லாமல் கிடப்பது மாதிரியான எண்ணத்துடன் விரைசலாக வந்திருந்ந்தாள். நடமாடும் கழிப்பறையின் மறைவில் கூட சென்று உபாதையைத் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் இந்தப் பகல் நேரத்தில் அதையெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் தோன்றியது. நடமாடும் கழிப்பறை இப்படியே ஒரே இடத்தில் நின்றிருந்தால் அதை தான் இப்படி நினைப்பது போல யாராவது மறைவிடமாகப் பயன்படுத்தத்தான் செய்வர் என்ற நினைப்பு வந்தது அவளுக்கு.
 

லாரியொன்றை நிறுத்தி வைத்து அதற்குச் சாய்வான கூரை போட்ட மாதிரி இருந்தது. திடீரென்று வீசிய காற்றில் படபடத்து மண் அதன் மேல் விழுகையில் படபடவென்ற சப்தம் கிளம்பியது. வாலையாட்டிய படி வந்த நாயொன்று குத்துக் காலிட்டு உட்கார்ந்து நடமாடும் கழிப்பறையைப் பார்த்தது. காதுகளை வேகமாக அசைத்தபடி பிறகு ஓட ஆரம்பித்தது.
 

நடமாடும் கழிப்பறையில் மூன்று அறைகள் தென்பட்டன. நன்ன்கு சக்கரங்களும் தரையில் தொடாமல் சற்றே எம்பியபடி நின்றிருந்தன. அதற்கு நான்கு பக்கங்களிலும் இரும்பு முட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தன.
 

"இதில நாம் உக்கார்ராதல்லா எங்க போகும்?" மாதவியைப் பார்த்தபடி சுருங்கின சட்டை போட்டிருந்தவன் கேட்டான். அவன் முகம் பளிச்சென்றிருந்தது. நன்கு தூங்கி எழுந்து வந்தவன் போலிருந்தான். முப்பது வயதுகூட இருக்காது. இவ்வளவு சாவகாசமாய் நிற்பது ஆச்சர்யமளிப்பது போல பார்த்தான்.
 

" ஆமா எங்க போகும் ஆவியாருமா.. குழாய் ஒண்ணு மேல போகுதே..
 

"ஆவியாவெல்லா போகாது. அப்பப்போ வழிச்சு ஏதாச்சும் பெரிய பீப்பாய்ல அடச்சு கொண்டு போறதத் தவிர வேற ஒண்ணும் வழியில்ல.
 

"காசு குடுக்கணும்லே..."
 

"காசி இல்லாம நடக்குமா.."
 

வயிற்றைப் பிடித்துக் கொள்வது போல நின்றாள் மாதவி. இன்னும் கொஞ்ச நேரம் நின்றால் வலி அதிகமாகும். மாதவிடாய் வலியாக இருக்குமோ. நாட்களை எண்ணிப் பார்த்துக் கொண்டாள். இன்னும் இருபதைத் தாண்டவில்லை. மலக்கழிவு வயிறில் சேர்ந்து அலைக்கழிக்கும் வலிதான்.
 

"உனக்கு வயித்த வலி ஒண்ணும் இல்லியா.."
 

"நான் வேடிக்கை பாக்கத வந்தேன். ஒவ்வொரு வீதிக்கும் இது எப்ப வரும்ன்னு தெரிஞ்சிக்கலாமுன்னு வந்தேன். போர்டெல்லாம் ஒண்ணும் காணம்."
 

"பொறவு போடுவாங்களோ என்னமோ"
 

"பாம்பே கக்கூஸ்தானா. இல்லெ கீழே உக்கார்ற மாதிரியா?"
 

"அதுவும் இருக்கும். இதுவும் இருக்கும். தனித்தனியா இருக்கும் போல.."
 

"தேர் ஒண்ணு நெலைக்கு வந்த மாதிரி இருக்குது."
 

"சத்தம் போட்டுச் சொல்லிராதே. சிக்கலாயிரும். மலம் கழிக்கிற வேனும், தேரும் ஒண்ணா சண்டைக்கு பெரிய கோஷ்டியே ஒண்ணு நிக்கும்."
 

வயிற்றுவலி கால்களிலிருந்து ஊடுருவி மெல்ல உடம்பு முழுக்க நிறைப்பதாக இருந்தது. உடம்பு ஒரு கணம் நிலைகுலைந்து திரும்பவும் சகஜநிலைக்கு வந்தது போலிருந்தது. உடம்பின் மயிர்க்கால்கள் குத்திட்டு ஓய்ந்தன. உடம்பைத் தளர்த்தி எங்காவது கிடத்திவிட வேண்டும் போலிருந்தது மாதவிக்கு. வயிற்றிலிருந்த மலத்தை வெளியேற்றி விடுவதைத் தவிர வேறு உபாயம் இல்லை. எங்காவது உடனடி மறைப்புத் தேட வேண்டும் போலிருந்தது. நடமாடும் கழிப்பறையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
 

கழிப்பறையின் அடுத்த பக்கம் போய் நின்றாள். எழுத்துக்கள் பூச்சியாய் நெள்ந்து கொண்டிருப்பது போல் பட்டது. வயிற்றுள் வலியை உண்டாக்குபவை இதுமாதிரி சின்னப்பூச்சிகளாகத்தான் இருக்க வேண்டும். கண்களை மறைத்த ஒருவகை நீர் எழுத்துக்களை தெளிவற்றதாக்கிக் கொண்டிருந்தது. இரண்டு லிட்டர் தண்­ர் மட்டும்தான் உபயோகிக்க வேண்டும். நெடுநேரமோ அல்லது பல நாட்களோ ஒரே இடத்தில் நிற்க வைப்பதாக இருந்தால் டயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு இரும்புத் தூண்களைப் பயன்படுத்துங்கள். விளக்கங்களுக்கு படத்தைப் பார்க்கவும். உள்ளே துணிகள், கழிவுகளை கழிப்பறைக்குள் போடாதீர்கள். உங்கள் உடம்பை லகுவாக்க இது உதவும். திறந்த வெளிகளை மலம் கழிக்கப் பயன்படுத்தாதீர்கள். நோய்களைப் பரப்பும். இவ்வகை வாசகங்கள் நிறைந்திருந்தன. இவையெல்லாம் வயிற்றில் இருப்பதை கழித்து விட்டி சாவகாசமாகப் படிக்க வேண்டியவை என்ற நினைப்பு வந்தது மாதவிக்கு.
 

வயிற்றுவலி மெல்ல உடம்பு முழுக்க நிறைப்பதுமாதிரி இருந்தது. வலியால் கால்கள் தளர்ந்துவிடும் போலிருந்தது. புதுக் கழிப்பறை பயன்படுத்துவதில் எந்த அசூசையும் இருக்காது. உள்ளே நுழைந்து பார்த்ததும் அதன் சுத்தமும் புது வாசனையும் இங்கயே குடியிருக்கலாம் போல இருக்கு என்று யாரிடமாவது சொல்ல விருப்பம் வந்தது மனதில் அவளுக்கு. கசங்கிய சட்டைக்காரன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

சுப்ரபாரதிமணியன்

 

கழிப்பறை 1                            கழிப்பறை 2   

சுப்ரபாரதிமணியன் -ன் இதர படப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]